வஞ்சியர் காண்டம்
தினகரன் வசந்தம் விமர்சனம் மார்ச் 4, 2013
கல்லாய் இரு!
மண்ணாய் இரு!
பெண்ணாய் இரு!’
இப்படிச் சொல்லித்தான்
வளர்க்கப்படுகிறாள் பெண். அது ஆப்பிரிக்காவின் ஆதிப் பழங்குடிப் பெண்ணோ, அமெரிக்காவின் அல்ட்ரா
மாடர்ன்
நங்கையோ... இதற்கு
விதிவிலக்கில்லை. பெண்களை உயிரும் உணர்வும் இல்லாத ஜடப் பொருளாகப் பார்க்கும்
இந்தப் பார்வையை அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறது ‘வஞ்சியர் காண்டம்’ நாடகம்.
சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான ‘வஞ்சியர் காண்டம்’ பகுதியை மட்டும் களமாக
எடுத்து நாடகமாக்கியிருக்கிறார் ஆசிரியர் பிரளயன். தொடக்கத்தில் ‘பத்தினியர் சொல்... அது
பதியைக் காக்கும் சொல்...’ என்றபடி நாடகக் கலைஞர்கள் மேடையை வலம் வரும்போதே புதிதாக எதையோ சொல்ல வருகிறார்கள்
என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.
குடவாயில் கோட்டத்தில் கண்ணகிக்கு கோயில் கட்டி விழா
எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அதில் கலந்து கொண்டு மூன்று பெண்கள் திரும்புகிறார்கள்.
கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி, மதுரையில் அடைக்கலம் கொடுத்த மாதரியின் மகள் ஐயை. ஊரே விழாக் கோலம் பூண்டு
கண்ணகியை தெய்வமாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, மூவரும் ரத்தமும் சதையுமான நிஜக் கண்ணகியோடு கழிந்த பழைய நாட்களை நினைத்துப்
பார்க்கிறார்கள்.
‘‘கண்ணகி தெய்வமா? கொடுப்பவள்தான் தெய்வம். அனைத்தையும் இழந்தவள் கண்ணகி!’’ என்கிற வசனத்துடன்
வேகமெடுக்கிறது நாடகம். மேலும், கண்ணகி என்ற சாதாரண மனுஷியின் உணர்வலைகளை, மாதவியைப் பற்றிய
கண்ணகியின் மதிப்பீட்டை, காவற்பெண்டு, தேவந்தி, ஐயை ஆகியோர் பெண்ணாகப் பிறந்ததாலேயே படும் அவஸ்தையை நுட்பமாக அலசுகிறது. பெண், முதலில் தந்தைக்கு, பிறகு கணவனுக்கு, அதற்குப் பிறகு மகனுக்கு என்று காலம் காலமாக
அடிமையாக இருப்பதை உரத்துச் சொல்கிறது.
காவற்பெண்டு கண்ணகியிடம் தன் இளம் வயதுக் காதல் அனுபவத்தைப்
பகிர்ந்து கொள்கிறாள். கள்வர்களால் காதலன் கொல்லப்பட்டதையும் சொல்கிறாள். ‘‘பிறகு எப்படி உனக்கு
நாகமணி பிறந்தாள்?’’ என்று கண்ணகி கேட்கிறாள். ‘‘உனக்காக உன் தாய் கருவுற்றாள். உன் தாய்ப் பாலுக்காக நான் கருவுற்றேன்’’ என்று அழுதபடி சொல்லும்
காவற்பெண்டு நம்மை அதிர வைக்கிறாள். செல்வந்தர்களின் குழந்தை வளர்ப்புக்கு
பலிகடாவாகும்
செவிலித்தாய்களின்
மறைக்கப்பட்ட வரலாறு பதிவாகிறது.
கோவலன் பிரிந்து போயிருக்க, காவற்பெண்டிடம், ‘நீர், நிலம், காதல்’ ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பதம் கேட்கிறாள் கண்ணகி. ‘நெருப்பு, வானம், பிரிவு’ என்று பதில்கள். ‘‘அடிமைக்கு எதிர்ப்பதம்
என்ன?’’ என்று கேட்கிறாள் கண்ணகி.
பதிலில்லை. கண்ணகி தேவந்தியிடம் ‘‘உனக்காக வாழ்ந்திருக்கிறாயா?’’ என்று ஒரு காட்சியில் கேட்பது ஒவ்வொரு பெண்ணைப் பார்த்தும்
கேட்கப்படும் கேள்வி.
எந்தப் பெண்ணும் தனக்காக வாழவில்லை என்பது அழுத்தம் திருத்தமான
உண்மை. ஓரிடத்தில், கண்ணகியை தெய்வமாக வழிபடுபவர்களைப் பார்த்து சத்தம் போட்டுச் சொல்கிறாள்
காவற்பெண்டு... ‘‘போர் தெய்வமாம், கொற்றவையாம்! போருக்கு எதற்கய்யா தெய்வம்? போங்கள்! போரின்றி வாழ வழி சொல்லும் தெய்வத்தைத்
தேடுங்கள்!’’
தேசிய நாடகப்பள்ளி, மண்டல வள மையம் - பெங்களூருவும், தஞ்சாவூர் தென்னக
பண்பாட்டு மையமும் இணைந்து, இந்தக் கலைஞர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுத்து நாடகத்தை
உருவாக்கியிருக்கின்றன. பிப்ரவரி 11ல் தொடங்கி 20ம் தேதி வரை புதுச்சேரி, சென்னை, திருச்சி உட்பட பத்து ஊர்களில் பத்து நாட்கள்
தொடர்ந்து அரங்கேற்றப்பட்டது ‘வஞ்சியர் காண்டம்’.
காப்பியக் காலத்துக்கு பொருத்தமான இசை, பாடல்கள், தெருக்கூத்து, நடனம், அரங்க அமைப்பு, தேர்ந்த நடிகர், நடிகைகள், சிலப்பதிகாரத்தை பெண்ணிய நோக்கில் அணுகும்
பார்வை, பேராசிரியர் ராஜுவின்
தேர்ந்த நெறியாளுகை... என்று பாராட்ட இந்த நாடகத்தில் பல விஷயங்கள் உண்டு. ‘பொதுப்பள்ளிக்கான மாநில
மேடை’யின் சார்பாக சென்னையில்
இந்த நாடகம் அரங்கேறியது. சலிப்பூட்டும் திரைப்படங்களுக்கு மத்தியில் புதிய சிந்தனையைக் கிளறிவிடும் ‘வஞ்சியர் காண்டம்’ புதிய நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக